சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக்கண்காட்சி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜன.16 முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இலச்சினையை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், பொது நூலகத் துறை இயக்குநர் ச.ஜெயந்தி, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இது தமிழகத்தின் சர்வதேச இலக்கிய பரிமாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உலகின் 100 நாடுகளின் பங்கேற்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுதல் போன்ற இலக்குகளை எட்டும் முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைகிறது.
தமிழ் இலக்கியத்தை சர்வதேச அரங்கில் நிலைப்படுத்துவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். வரும் ஆண்டுகளில் அதிகளவில் நாடுகள் பங்கேற்கும்போது தமிழகத்தின் 2-ம் நிலை நகரங்களில் கண்காட்சியை நடத்தவும் ஆலோசிப்போம். நடப்பாண்டில் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
