கோவையில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனை தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அண்ணாமலை இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், தற்போது குணமடைந்து மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அண்ணாமலையுடன் இணைந்து மேற்கொண்ட இந்தப் பயணம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினர் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்ணாமலை ஸ்கூட்டரை ஓட்ட, அதன் பின்னால் வானதி சீனிவாசன் அமர்ந்து கொண்டு வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். கணபதி சிவசக்தி காலனியில் தொடங்கிய இந்தப் பேரணி, பாரதி நகர், விளாங்குறிச்சி சாலை, மணியகாரம்பாளையம், சாய்பாபா காலனி உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக வடவள்ளி பேருந்து நிலையம் வரை சென்றது. திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவும் கோவையில், இந்த ‘பைக் பிரச்சாரம்’ பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, பாஜக தனது பலத்தைக் காட்டும் விதமாக இந்தப் பேரணியை ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
