சென்னையின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் புறநகர் ரயில் வழித்தடங்களில் ஒன்றான அரக்கோணம் – செங்கல்பட்டு இடையேயான 68 கிலோமீட்டர் தூரப் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ. 993 கோடி மதிப்பீட்டில் இந்த மெகா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ரயில்களின் தாமதத்தைக் குறைக்கவும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இத்திட்டம் வழிவகை செய்யும். இந்தத் திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “இந்தத் தடம் விரிவாக்கத்தின் மூலம் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையேயான ரயில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன், ரயில்வேயின் ஒட்டுமொத்த செயல்பாடும் மிகவும் சீராகவும், திறம்படவும் மாறும்” என்று தெரிவித்துள்ளார்.
தென்னக ரயில்வேயால் இயக்கப்படும் இந்த வழித்தடமானது சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கிறது. தற்போதுள்ள ஒற்றை ரயில் பாதை அதன் முழுத் திறனையும் தாண்டி இயக்கப்பட்டு வருகிறது. தினசரி லட்சக்கணக்கான புறநகர் பயணிகள், தூரப் பயண ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என அனைத்தும் இந்த ஒரே பாதையைப் பயன்படுத்துவதால் அடிக்கடி ரயில்கள் தாமதமாவது வாடிக்கையாக உள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், இந்த இரட்டை வழித்தடத் திட்டம் தற்போதைய அவசியத் தேவையாக மாறியுள்ளது. இத்திட்டம் வெறும் பயணிகளுக்கானது மட்டுமல்லாமல், தமிழகத்தின் மிக முக்கியப் பொருளாதார மற்றும் தொழிற்துறைப் பகுதிகளுக்குப் புத்துயிர் அளிப்பதாக அமையும்.
இந்த ரயில் பாதை மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி (Mahindra World City), ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மற்றும் இருங்காட்டுக்கோட்டை போன்ற தமிழகத்தின் முன்னணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மண்டலங்கள் வழியாகவும், அவற்றின் அருகாமையிலும் கடந்து செல்கிறது. சிமெண்ட், உணவுத் தானியங்கள், இரும்பு, எஃகு மற்றும் ஆட்டோமொபைல் (வாகனங்கள்) போன்ற முக்கியப் பொருட்கள், தொழிற்சாலைகளில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத் துறைமுகங்களுக்கு மிக விரைவாகக் கொண்டு செல்லப்பட இத்திட்டம் உதவும்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு கூடுதல் பலம்: காஞ்சிபுரம் அருகே அமையவுள்ள புதிய பரந்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த ரயில் தடம் விரிவாக்கம் பெரும் பக்கபலமாக இருக்கும். எதிர்காலத்தில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அங்கிருந்து கொண்டு செல்லப்படும் சரக்குப் போக்குவரத்துகளுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்பு மிக முக்கியப் பங்காற்றும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
