வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்(SIR) மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கின. தமிழ்நாட்டில், 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது.
எஸ்.ஐ.ஆர் பணிகளில்தமிழ்நாட்டில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓக்கள்) ஈடுபட்டனர். பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை வழங்கினர். இந்தப் பணிகளை ஒரே மாதத்தில் முடிக்க வேண்டும் என்பதால், எஸ்.ஐ.ஆர் படிவங்கள் முழு வீச்சில் விநியோகிக்கப்பட்டன. 2002 முதல் 2005 வரையிலான எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்புப் பணிகளில், 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் ஈடுபட்டனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களாகப் பெற்று வந்தனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறைவு செய்வதற்காக, தேர்தல் ஆணையம் இரண்டு முறை காலக்கெடுவை நீட்டித்தது. அதாவது, கடந்த 11ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில், வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை வெற்றிகரமாகத் திரும்பப் பெற்றுள்ளனர். இந்தப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்துவிட்டனர். தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வரைவுப் பட்டியல் வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு, அதாவது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத கணக்கின் படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் அதிலிருந்து சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் மட்டும் 40 லட்சம் வாக்காளர் இருக்கும் நிலையில் அதில் சுமார் 15 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்கள், இரட்டைப்பதிவு கொண்டர்கள், நிரந்தரமாக மறுகுடியமர்வு பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள் சுமார் ஒரு கோடி பேர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 19ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் போது அதில் இடம்பெறாத தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
