தமிழகத்தில் அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், திமுக ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத்தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, திமுக ஐ.டி. பிரிவினரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தை தடுக்கவும், சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனிடையே, இந்த மனுக்கள் நீதிபதி டீ.வினோத் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீனிவாச மாசிலாமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இடையீட்டு மனுதாரரான இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற அனுமதித்தால் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்.

அவ்வாறு முறைகேடு நடந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என இன்பதுரை தரப்புக்கு அனுமதி அளித்த் நீதிபதி மனுவை திரும்ப பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும்,இன்பதுரை தாக்கல் செய்த மனுவை நீதிபதி முடித்து வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version