தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமாக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தெரிகின்றது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் ஏப்ரல் 1ம் தேதிவரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் 27ம் தேதி வரை சென்னை(மயிலாப்பூர்), காஞ்சிபுரம் (ஆலந்தூர்), செங்கல்பட்டு (தாம்பரம்) மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 28ம் தேதி சென்னை (ஆர்.கே.நகர்), திருவள்ளூர் (திருவொற்றியூர்), 29ம் தேதி கன்னியாகுமரி(நாகர்கோவில்), திருநெல்வேலி(ராமநாதபுரம்).
30ம் தேதி தென்காசி(கடையநல்லூர்), தூத்துக்குடி (கோவில்பட்டி), 31ம் தேதி விருதுநகர்(சிவகாசி), ராமநாதபுரம் (பரமக்குடி)
ஏப்ரல் 1ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
