புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொகுதிப் பங்கீட்டில் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்ததால், கூட்டணி முடிவாகும் முன்பே இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளில் போட்டிப்போட்டுக் கொண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தற்போது ஒரு வழியாகத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, எந்தெந்த இடங்கள் யாருக்கு என்பது முடிவாகியுள்ளது. இதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத மற்ற வேட்பாளர்களை உடனடியாகத் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெறுமாறு இரு கட்சிகளின் தலைமையும அறிவுறுத்தியுள்ளன.
இருப்பினும், தலைமை இட்ட கட்டளையை ஏற்க மறுக்கும் பல வேட்பாளர்கள், தங்கள் செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு ரகசிய இடங்களுக்குத் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மறுநாளுக்குள் (வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்) மனுவைத் திரும்பப் பெறாவிட்டால், அது கூட்டணிக் கட்சிகளுக்குள் ‘நட்பு ரீதியான போட்டி’ என்ற பெயரில் வாக்குகளைப் பிரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒருவேளை அதிருப்தி வேட்பாளர்கள் மனுவைத் திரும்பப் பெறத் தவறினால், அது ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குச் சாதகமாக முடிந்துவிடுமோ என்ற அச்சம் திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் நிலவுகிறது. புதுச்சேரி அரசியலில் இதுவரை கண்டிராத இந்த ‘வேட்பாளர்கள் தலைமறைவு’ நாடகம், தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
