மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் எரிவாயுவை ஏற்றி வரும் ‘பைன் கேஸ்’ (Pyxis Gas) மற்றும் ‘ஜக் வசந்த்’ (Jag Vasant) ஆகிய இரண்டு பிரம்மாண்டக் கப்பல்கள், மிகவும் அபாயகரமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளன. சுமார் 92,000 டன் எல்.பி.ஜி-ஐ சுமந்து வரும் இந்தக் கப்பல்கள், அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது உள்நாட்டில் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கப் பெரிதும் உதவும்.
ஏற்கனவே ‘ஷிவாலிக்’ (Shivalik), ‘நந்தா தேவி’ (Nanda Devi) மற்றும் ‘ஜக் லட்கி’ (Jag Ladki) ஆகிய கப்பல்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில், தற்போது வரும் புதிய வரத்துகளால் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகளை முறியடித்து, தட்டுப்பாடின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து காத்திருக்கும் பொதுமக்களின் நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
