சாத்தான்குளத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் வீடு புகுந்து அவரது பெண் குழந்தையைக் கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சாத்தான்குளம், ஓடக்கரை தெருவைச் சேர்ந்த சுபாஷ்,  அரசூர் 1 கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். 26ஆம் தேதி,  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவர் வீட்டில் இருந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததோடு,  சுபாஷின் மனைவியின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம்.

அவரின் அலறல் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தபோது, அந்தப் பெண் சுபாஷின் இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட முயன்றுள்ளார்.

சுபாஷ் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை மறித்து குழந்தையை மீட்டுள்ளனர்.

தன்னைப் பிடிக்க முயன்றவர்களை அந்தப் பெண் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர், அந்தப் பெண் மீது புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதித்ததாகக் கூறி, சுபாஷின் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர்.

தொடர்ந்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும், மேல சாத்தான்குளம் பகுதியில் ஒரு மாதமாக குடியிருந்து வருவதும், அப்பெண் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.

போலீஸார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version