2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி.  ஆனால் இம்முறை அதிமுக கூட்டணியில் உடன்பாடு எட்டப்படாததால், தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்தார் கிருஷ்ணசாமி. இதுதொடர்பாக பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகத்தை அதிமுக புறக்கணித்துவிட்டது. திடீரென பேச்சுவார்த்தை நின்றுவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். தேவேந்திர குல வேளாளர்களை அதிமுக அவமதித்துவிட்டதால், நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பது மட்டுமே உண்மையான அரசியல் வெற்றி என்று கூறியிருந்தார்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

”தமிழகத்தில் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் நாங்கள் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அந்தப் பெரிய கட்சி எங்களைச் சற்றும் மதிக்கவில்லை. தொடர்ந்து எங்களைப் புறக்கணிப்பதும், உதாசீனப்படுத்துவதுமே அவர்களின் வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார். அமித் ஷா தன்னைத் தூக்கிக்கொண்டு போய் புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துவிடுவார் என்று அவர் பகல் கனவு காண்கிறார்.

நாங்கள் இந்தக் கூட்டணியை விட்டு வெளியேறி வெகுதூரம் வந்துவிட்டோம். இனி அவர்களுக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக மக்கள் அளித்தவை. அவை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்டவை அல்ல.

தென் மாவட்டங்களில் அதிமுக மிகவும் பலவீனமடைந்துள்ளது. வரும் தேர்தலில் சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் அவர்கள் டெபாசிட் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, நாங்கள் இந்தத் தேர்தலில் சுமார் 60 முதல் 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அதில் குறைந்தபட்சம் 10 அல்லது 12 தொகுதிகளில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்,” என்று உறுதியுடன் கூறியிருந்தார்,

இந்தநிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது, கிருஷ்ணசாமி நேரடியாக பேசாமல், வேறு ஒரு நபரை வைத்தே கூட்டணி பேசினார் என்று EPS தெரிவித்துள்ளார். முதலில் 10 இடங்கள் கேட்டார், பிறகு 5 இடங்கள் கேட்டார். அவர் கேட்ட எண்ணிக்கையில் இடங்களை வழங்க எங்களால் இயலாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் 31 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 33,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அப்படி பார்த்தால் அவருக்கு 10 சீட்டுகள்  எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இபிஎஸ், கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வைத்தே சீட் வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version