குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது விசாரணையை துவங்கியுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் சார்பில், பல்வேறு காரணங்களுக்காக பரோல் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல்முறையீட்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் உள்ளபோது பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இதுதொடர்பாக, முடிவெடுக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2025ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ. டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ், கைதிக்கு உயர் நீதிமன்றமோ, அரசோ பரோல் வழங்க முடியுமா என்ற கேள்விகக்கு விடை காண்பது தொடர்பான இந்த வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பரோல் வழங்க உயர் நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் அதிகாரம் உள்ளதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்ததால், மாற்று கருத்து இருக்கிறதா என அறிந்துகொள்ளும் வகையில், நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version