சென்னையில் தெருநாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுப் பணிகளுக்காகக் கோரப்பட்டுள்ள டெண்டருக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய மற்றும் மாநில விலங்குகள் நல வாரியங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தெருநாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களைக் கண்டறிந்து சிப் பொருத்தும் பணிகளுக்காக ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர் வழக்கு:

இந்நிலையில், இந்த டெண்டருக்குத் தடை விதிக்கக் கோரியும், நிதி ஒதுக்கீடு செய்யத் தடை விதிக்கக் கோரியும் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “ஏற்கனவே விலங்குகள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்திற்குப் புறம்பாக அரசு இந்த டெண்டரைக் கோரியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி மத்திய விலங்குகள் நல வாரியம், மாநில விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடைத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version