தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தை உயர்த்தவும், கூடுதலாக கிடைக்க வேண்டிய 20 மக்களவை இடங்களைப் பெறவும் இருந்த பொன்னான வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு 50 சதவீத கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கினார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை போலச் செயல்பட்டு, இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் குருட்டுத்தனமாக அதனை எதிர்த்துள்ளார். இதனால் 20 எம்பி இடங்களை கூடுதலாகப் பெறும் உரிமையை தமிழகம் இழந்து நிற்கிறது.

https://x.com/EPSTamilNadu/status/2045421998365663273?t=YTFP59ju86IKxQhKLjWDpg&s=08

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 எம்பி இடங்களை இழந்திருப்போம். ஆனால், திமுகவின் இந்த அறிவற்ற எதிர்ப்பால், இனி 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை நடக்கும். அப்போது தமிழகம் இன்னும் அதிகமான எம்பி இடங்களை இழக்க நேரிடும்.

கடந்த 1998-ஆம் ஆண்டிலேயே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். ஆனால், அன்று உங்கள் ‘இந்தியா’ (INDI) கூட்டணியில் உள்ள கட்சிகள் அதனைத் தடுத்தன. இன்று நீங்களும் அதே மசோதாவை எதிர்த்து, அந்த உன்னத நோக்கத்தைக் கொன்றுவிட்டீர்கள். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பையா? அல்லது பெண்களின் அதிகாரமளித்தலுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை அழித்ததையா?” என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version