பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று (17.07.2026) ஒரு நாள் மட்டும் 16922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு  மூலம் தகவல்களை இணையதளத்தின் வாயிலாக  பதிவேற்றம் செய்துள்ளனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் நேற்று (17.07.2026) தொடங்கியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இது அமைகிறது.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாகத் திட்டமிடுவதற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தகவல்கள்தான் அடிப்படையாக அமைகின்றது.

அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும். அதற்கு முன்பாக, 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை, முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.in  என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம்.

தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.

சென்னையில் நேற்று (17.07.2026) ஒரு நாள் மட்டும் 16922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version