முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வருகிற ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி:
திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின், ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்ட காலகட்டத்தில் ஆ.ராசா தனது வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, அதாவது 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆ.ராசாவின் மனு தள்ளுபடி:
இந்த வழக்கில் ஆ.ராசா தரப்பில் கடந்த ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ராஜாவின் வருமான வரி கணக்கு தொடர்பான விபரங்கள் அவரிடமே இருக்கும் என்றும், சாட்சி விசாரணையின் போது அதனை அவர் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். வேங்கடவரதன், இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விபரங்களை கோரிய ஆ.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட விசாரணை:
மேலும், வழக்கில் ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.