சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, மீண்டும் ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவின் போதும் இதேபோல் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதுஇதையடுத்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதவியேற்ற விழாவில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுவதற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதற்கு தவெக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முன்னுரிமை பெற வேண்டும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இதற்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “பதவியேற்பு விழா என்பது முழுமையாக ஆளுநர் மாளிகையின் கட்டுப்பாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வு. அதன் நெறிமுறைகளையும், நிகழ்ச்சி நிரலையும் ஆளுநர் மாளிகை நிர்வாகமே முடிவு செய்கிறது. இதில் மாநில அரசு தலையிட முடியாது” என்று தவெக தரப்பில் கூறப்பட்டது
