தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான பெரும்பான்மையை நோக்கிய பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்குத் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகக் கடலில் மூழ்கினர். பட்டாசுகள் முழங்க, இனிப்புகள் பரிமாறப்பட்டு, வெற்றிக் கோஷங்களுடன் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தற்போது இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளதால், தவெக-வின் பலம் 116 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தனது அரசியல் பயணத்தில் கைகொடுத்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குத் தொலைபேசி வாயிலாக மட்டும் நன்றி கூறாமல், ஒரு படி மேலே சென்று அவர்களது கட்சி அலுவலகங்களுக்கே நேரில் சென்று நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதேபோல் விசிகவும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
மறுபுறம், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆதரவு கடிதங்களுடன் விஜய் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் மாளிகை செல்ல உள்ளதால், பனையூர் முதல் கிண்டி வரை தவெக தொண்டர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் இன்று மாலை தொடங்கலாம் என்பதால், ஒட்டுமொத்த மாநிலமும் ஆளுநர் மாளிகையின் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
