செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம், கடந்த 2016-ஆம் ஆண்டு 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றிருந்தது. நீண்ட நாட்களாக இந்த கடன் தொகையை லிங்குசாமி செலுத்தாததால், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் தற்போது உள்ளது.

இதற்காக அளிக்கப்பட்ட காசோலை, பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக கூறி பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் குமார் கடந்த 2018 ம் ஆண்டு சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் லிங்குசாமி, திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, இயக்குனர் லிங்குசாமி, திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி இருவருக்கும் தலா ஒராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இயக்குனர் லிங்குசாமி, பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவத்திடம் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க லிங்குசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version