தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ குறித்து இ.பி.எஸ் விமர்சித்து பேசினார். “ஆ.ராசாவின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ந்து போய்விட்டார்.
சொந்த அப்பாவையே வீட்டுச் சிறையில் வைத்ததாகக் கூறப்படும் கருத்தைத் தட்டிக்கேட்க ஸ்டாலினுக்குத் தெம்பு இருக்கிறதா? ஆ.ராசாவைக் கண்டித்தால் இன்னும் பல ஆடியோக்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் முதலமைச்சர் இருக்கிறார்.” “அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், இந்த ஆடியோ விவகாரம் குறித்துச் சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆ.ராசா, அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசுவது அயோக்கியத்தனமானது என்று விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மண்டியிட்டு பதவி பெற்றவர் என்றும் அரசியலுக்கு அருகதையற்றவர் என்றும் விமர்சித்தார். மேலும் ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு எனவும் காட்டமாக ஆ. ராசா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
