2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் தயாரிப்புகளை ஒரே நேரத்தில் பல மட்டங்களில் அமைதியாகவும், திட்டமிட்ட வகையிலும் முன்னெடுத்து வருகிறது. வெளியில் பெரிய அரசியல் சலசலப்பு தெரியாமல் இருந்தாலும், தரை மட்டத்தில் தொடங்கி தலைமை மட்டம் வரை ஒருங்கிணைந்த செயல்பாடு நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்: முதற்கட்டமாக, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளை நிலை நிர்வாகிகள் மாற்றம் வரை மற்றும் புதிதாக இணைந்த சிலருக்கு பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. செயல்பாடுகள் குறைந்திருந்த பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் அமைதியாக நடத்தப்பட்டு, இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கு தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் என்பது வெறும் பிரச்சாரம் அல்ல, அமைப்பு பலம் தான் அடித்தளம் என்ற அணுகுமுறையுடன் கட்சி செயல்படுகிறது.

மக்கள் கருத்து சேகரிப்பு: ஏற்கனவே, பாஜக, அமமுக உள்ளிட்டவைகளுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக, மீண்டும் ஆட்சி அமைத்திடவேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது தான் வழக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே சென்று தேர்தல் வாக்குறுதியையும் பல கட்டங்களாக அறிவித்து வருகிறார்.
இதனால் ஆட்டம் கண்ட திமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, மக்கள் கருத்து சேகரித்து, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக கனிமொழி எம்.பி. தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக பொதுமக்கள், தொழிற்துறை பிரதிநிதிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் கருத்துகளை பதிவு செய்ய ஆன்லைன் தளங்கள் மற்றும் நேரடி மனு பெறும் அமைப்புகளும் செயல்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. “மக்கள் மனதில் உள்ள தேவைகள் அறிக்கையாக மாற வேண்டும்” என்ற கோணத்தில் இந்த முயற்சி நடைபெறுகிறது.

அதே நேரத்தில், தற்போதைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விளக்கப் பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டங்கள், கல்வி மற்றும் மருத்துவ துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், முதலீட்டு அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் ஆகியவை பொதுமக்களிடம் கொண்டு செல்ல மாவட்ட மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “செய்ததைச் சொல்லும்” பிரச்சாரம் மற்றும் “செய்யப்போகிறதை விளக்கும்” திட்டம் ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் அணுகுமுறை அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் தயாரிப்பின் முக்கியமான அத்தியாயமாக பார்க்கப்படுவது தரை மட்ட கண்காணிப்பு பணிகளாகும். வாக்காளர் பட்டியல் ஆய்வு, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், வீடு தோறும் தொடர்பு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் கட்டமைப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியும் தனிப்பட்ட பொறுப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு, பூத் லெவல் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நாளில் ஏற்படக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கணித்து செயல்திட்டம் வகுப்பதே இதன் நோக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது கவனம் ஈர்த்து வரும் அம்சம் என்னவென்றால், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடுகள். மாநிலம் முழுவதும் கட்டமைக்கப்பட்ட இந்த பயிற்சி அமர்வுகளில் தேர்தல் ஆணைய விதிமுறைகள், EVM மற்றும் VVPAT செயல்முறை, வாக்குச்சாவடியில் முகவர்களின் சட்டபூர்வ உரிமைகள், அவசரநிலைகளை சமாளிக்கும் நடைமுறைகள் போன்றவை விரிவாக விளக்கப்படுகின்றன. “வாக்குச்சாவடி மட்டமே வெற்றியின் மையம்” என்ற கோஷத்துடன் இந்த பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் நாளில் ஒழுங்கும் சட்டப்படியான செயல்பாடும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இதன் மைய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இவை மட்டுமின்றி, பிரச்சார வடிவமைப்பும் ஆரம்ப கட்டத்திலேயே திட்டமிடப்பட்டு வருகிறது. சமூக ஊடக அணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர்களை சென்றடையும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள் தயாராகின்றன. மாவட்ட சுற்றுப்பயணங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைகள் போன்றவை அடுத்த கட்டங்களில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் (BYO) ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மாநாட்டிற்காக 10,00,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாகத் தனித்தனி அமர்வு பகுதிகள், முகவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற இயக்கத்தின் கீழ் முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.
2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அடுத்தடுத்த மாநாடுகள்: திருவிடந்தையைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் திருப்பத்தூர் (பிப். 14), மதுரை (பிப். 21) மற்றும் கோவை (பிப். 27) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த மண்டல மாநாடுகள் நடைபெறவுள்ளன.
முன்னதாக, கடந்த 1ம் தேதி முதல் திமுக தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது. ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் 22 நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டு வருகிறது. இந்த வரிசையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் இந்த பிரமாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடக்கிறது. தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாடு, திமுகவின் தேர்தல் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
