நாங்குநேரியில் டீக்கடையில் நின்றிருந்தவர்களை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. என்ன நடந்தது அங்கு..? கள தகவல்கள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடை முன்பு திங்கட்கிழமையான நேற்று இரவு சிலர் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியே 3 இருசக்கர வாகனத்தில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த திடீர் தாக்குதலால் அங்கிருந்து பயந்து ஓடியவர்களை விடாமல் துரத்தி தாக்கியுள்ளது அந்த கொடூர கும்பல். சரமாரியாக தாக்கிய அந்த கும்பல் பின் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், இதில் மாற்றுத்திறனாளி ஜான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வட மாநில செங்கல் சூளை தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும், பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன் மற்றும் ராமசாமி வீரங்குளத்தைச் சேர்ந் கணேசன் மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த சஸ்கியம்மார் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக, 9 பேர் கொண்ட அந்த கும்பல் கடம்போடு வாழ்வு என்ற ஊரில் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் தாக்கி இரு சக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு வந்துள்ளனர். அதோடு வரும் வழியில் பார்ப்பவர்களையெல்லாம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தான் பெரும்பத்து பகுதியில் மேற்கூறிய சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பெரும்பத்து பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினார்.

இந்த சம்பவத்தில் தாக்குதல் நடந்த இடம் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், சாதிய ரீதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும், தாக்கிய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கும் நிலையில், இது கஞ்சா போதையில் நடந்த தாக்குதலா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் முக்கிய விடயமாக, தாக்குதல் நடத்திய கும்பல், “நவீன் வாழ்க” என கோஷம் போட்டுக்கொண்டே தாக்கியதாக கூறப்படும் நிலையில், “எனக்கும் அந்த தாக்குதலுக்கும் சம்மந்தம் இல்லை. என்னை மாட்டிவிடும் நோக்கத்தில் என் பெயரை கூறியிருக்கலாம்” என ரவுடி நவீன் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ரவுடி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இரட்டைக்கொலை சம்பவத்தால் நாங்குநேரி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு தொற்றியுள்ள நிலையில், சம்பவம் நடந்த பெரும்பத்து பகுதியில் மேலும் அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
