தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் அறிவிப்பு, தொகுதி ஒதுக்கீடு பணிகளில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சிக்குள் சில அதிருப்திகளும் கிளம்பியுள்ளன. அந்தவகையில், அமமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட சோளிங்கர் பார்த்திபன் (ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்) மற்றும் கோ.தண்டபாணி (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்) ஆகிய இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள இருவர் ஆளுங்கட்சியில் ஐக்கியமானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலகலுக்குப் பின்னணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என இருவரும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரன், இவர்கள் விரும்பிய தொகுதிகளைப் பேசிப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு பதினோரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், சோளிங்கர் இடம்பெறவில்லை. மாறாக, பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கவலை அடைந்த அவர்கள், டிடிவி தினகரனின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களின் வருகை வட தமிழகத்தில் திமுகவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவரிடம் இருந்து விலகிய பார்த்திபன், தவெகவுடன் அமமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிப்படையாக போட்டுடைத்துள்ளர். மேலும் திமுகவில் இணைந்துள்ள பார்த்திபன் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. அங்கு கொள்கை இல்லை என்று சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை அறிவித்திருந்தார் டி.டி.வி.தினகரன்.
அதாவது, சோளிங்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன்தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவார். தி.மு.க-வுக்கான சாவு மணியை இங்கிருந்து அடிப்போம்’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
