கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோவை, சித்ரா பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் விமான மூலம் பயணித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதில் அவ்வப் போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதுடன் அதிகாரிகள் சோதனைகளில் பிடிபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 5 கோடி மதிப்பிலான கஞ்சா, போதைப் பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.