திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பி.டி. ரோடு அரசு மருத்துவமனையில், பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய காவலரே மதுபோதையில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்த தங்கப்பாண்டி என்ற காவலர், அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த செவிலியர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார். போதை வெறியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அங்கிருந்த மேஜை, கட்டில் மற்றும் கணினிகள் உள்ளிட்ட மருத்துவமனைப் பொருட்களை அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள  அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டனர். பின்னர் தகவலறிந்து வந்த சக காவலர்கள், தங்கப்பாண்டியை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாக அழைத்துச் சென்றது மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவர்களும் செவிலியர்களும் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version