தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வலுவான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வரும் மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், மார்ச் 6-ம் தேதி வேலூரிலும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

ஏற்கனவே ஜனவரி 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் NDA கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். இப்போது அடுத்த கட்டமாக மதுரை மற்றும் வேலூர் பிரசாரங்கள் உறுதியாகியுள்ளன.

மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடக்கும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சி மதுரை ரிங் ரோடு மண்டேலா நகர் மைதானத்தில் நடைபெறும். கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் விழா ஏற்கனவே நடைபெற்றது. அதன்பிறகு மார்ச் 6-ம் தேதி வேலூரில் மற்றொரு பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த இரு கூட்டங்களும் NDA கூட்டணியை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளாகும்.

பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, பிரதமர் மோடி தமிழகத்தில் அதிக நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் மார்ச் மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி 3முறை தமிழ்நாடு வரவுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 1ல் மதுரையில் நடைபெறும் என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மார்ச் 6ம் தேதி வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர், மார்ச் 11ம் தேதி திருச்சில், தஞ்சை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி பிரதமர் மோடியின் அடுத்தடுத்த தமிழகம் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version