தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தமிழகத்தின் தேர்தல் தயார்நிலை குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறது. இதில் வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version