தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கினார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் இதுவரை 3,430 வேட்புமனுக்கள் தாக்கல், 698 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
3மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வது நிறைவடைவதையொட்டி, மீதமுள்ள வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக சேலத்தில் இருந்து கார் மூலம் எடப்பாடிக்கு வருகை தந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 1989-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் உள்ள அவர், ஏற்கனவே 1989, 1991, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 8-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். போடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்த அவர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனுவைச் சமர்ப்பித்தார். கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், தற்போது திமுக வேட்பாளராக ஓபிஎஸ் களம் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் ஆளுமைகளும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க எடப்பாடியில் மும்முரமாகப் பணியாற்றி வரும் நிலையில், ஓபிஎஸ் தனது புதிய அரசியல் பயணத்தைப் போடி தொகுதியில் இருந்து தொடங்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கியத் தலைவர்களின் இந்தத் தொடர் நகர்வுகள் தேர்தல் ரேசில் அனலைப் பறக்கவிட்டுள்ளன.
இதேபோல், சிவகாசியில் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமி, விருதுநகரில் கணேசன், நன்னிலத்தில் காமராஜ், மயிலத்தில் சிவி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல்,திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
