ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்பத்திலேயே ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்துத் தவித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு, ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது.  காயம்  காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தற்போது தீவிர உடல் தகுதிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் உடற்தகுதித் தேர்வை (Fitness Test) எதிர்கொள்ளவுள்ள நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் தோனி களம் இறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தோனியுடன் சேர்த்து, தசைப் பிடிப்பு காரணமாக விலகி இருந்த அதிரடி வீரர் டெவால்ட் பிரேவிஸும் அடுத்த போட்டியில் அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்துப் பேசிய சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பிரேவிஸின் உடல்நிலை தேறி வருவதாகவும், டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளிடம் தோல்வியைத் தழுவிப் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள சிஎஸ்கே, தனது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் இந்த நட்சத்திர வீரர்களின் வருகையுடன் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version