மத்திய சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில், அண்ணாமலையும் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அந்தச் சமயத்தில் கோவையிலேயே இருந்தும் கூட்டத்திற்கு வராதது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தைத் தவிர்த்திருப்பது பல்வேறு அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது. உட்கட்சிப் பூசலா அல்லது கூட்டணி கட்சிகளுடனான ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட சிக்கலா எனப் பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், இந்தச் சம்பவம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே, அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ”பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தந்தை பழனிச்சாமி கவுண்டர் காலமானது அறிந்து வருத்தம் அடைந்தேன். இன்று மாலை அவரது இல்லத்திற்குச் சென்று ஏ.பி.முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை, இறைவன் வழங்கட்டும். பழனிசாமி கவுண்டர் ஆன்மா, இறைவன் பொற்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். கோயம்புத்தூரில் அண்ணாமலை இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version