அதிகார மமதையில் மூழ்கியுள்ள மத்திய அரசு, தங்களின் உரிமைகள், நியாயமான தேர்வுகள் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கோரி குரல் எழுப்பும் மாணவர்களை “தீவிரவாதிகள்” என அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், , கேள்வித்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கும், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதற்கும் காரணமான ஆட்சியிலேயே, இன்று தங்கள் உரிமைக்காக போராடும் மாணவர்களை தீவிரவாதிகள் என சித்தரிக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், விவசாயிகளை ‘தொழில்முறை போராட்டக்காரர்கள்‘ என்றும், அரசைக் கேள்வி கேட்பவர்களை ‘தேசவிரோதிகள்‘ என்றும் அழைத்தவர்கள், தற்போது இளைஞர்களையே தீவிரவாதிகள் என முத்திரை குத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“அரசை கேள்வி கேட்டால் தேசத் துரோகி என கூறுவது தான் இவர்களின் அரசியல். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “கல்வி அமைப்பு இன்று கொள்ளை லாப வணிகமாக மாறியுள்ளது. மலிவான மற்றும் தரமான கல்வியையும், நியாயமான தேர்வு முறையையும் ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதி செய்யும் வரை நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
