தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடந்த சில நாட்களாகக் கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸிடம், திமுக தரப்புக் குழுவினர் அதிகபட்சமாக 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கறாராகத் தெரிவித்துவிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மேலிடம், கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்தும் ஆலோசித்து வந்தது. இந்தச் சூழலில்தான், இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலைச் சரிசெய்யும் வகையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுத்தலின் பேரில், மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழலையும், மதச்சார்பற்ற கூட்டணியின் அவசியத்தையும் ப.சிதம்பரம் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஒரு படி இறங்கி வந்து காங்கிரஸிற்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, காங்கிரஸிற்கு 29 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் (29+1) வழங்க திமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த திடீர் சமரசத் திட்டத்தினால் கூட்டணியில் நிலவி வந்த முட்டுக்கட்டை கிட்டத்தட்ட நீங்கியுள்ளது. முன்னதாக 25 இடங்களுக்கு மேல் வழங்கவே முடியாது என்ற பிடிவாதத்தில் இருந்த திமுக, தற்போது ப.சிதம்பரத்தின் குறுக்கீட்டிற்குப் பிறகு நான்கு கூடுதல் இடங்களை வழங்கச் சம்மதித்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று மாலை அல்லது நாளை காலை கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version