அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மன்னிப்புக் கோரியுள்ளார்.
சமீபத்தில் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. மாநிலம் முழுவதும், 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசும், பாராட்டும் தெரிவித்தார் நடிகரும், தவெக தலைவருமான விஜய்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிக்கொண்டே நடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து ஆதவ் அர்ஜுனா தரம்தாழ்ந்து அவர்களை விமர்சிப்பது போல் கேட்டது. இந்த வீடியோ தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் தாம் பேசியதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு..
அனைவருக்கும் வணக்கம்,
எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு…
நன்றி!