சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை 1914ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர். ஏழை எளிய மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில், இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி அவர்களின் முயற்சியின் பேரில், கட்டப்பட்டுள்ள இதனை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களும், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா. மூர்த்தி அவர்களும், ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் அவர்களும் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டர் சாந்தி இளங்கோ உள்ளிட்ட அனைத்து மருத்துவர்கள் , செவிலியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் இரா. செந்தில்குமார், மேற்கு பகுதி செயலாளர் வ. பெ. சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த ஆட்சியில் ஒரு மாத காலத்தில் 400 மகளிர் குழந்தை பெற்று வந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சியில் ஒரு மாத காலத்தில் 900 முதல் 1000 வரை மகப்பேறு மருத்துவம் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
