தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய், பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்று மிக முக்கியமான அரசாணைக் கோப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களுக்குப் பெரும் பொருளாதார விடுதலையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதே இந்தப் படையின் முதன்மை நோக்கமாகும்.

அதேபோல், தமிழகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 தனி காவல் நிலையங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தனது கையெழுத்தின் மூலம் அதிரடி காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version