திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் பட்ட துன்பம் ஏராளம். ஒவ்வொரு நாளும் மக்கள் படுகின்ற துன்பம் பற்றி ஆட்சியாளர்கள் கவலை படாமல் உள்ளனர். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்வார். எதில் முதல் மாநிலம் கடன் பெறுவதில் முதல் மாநிலமாக உள்ளது. இந்த கடனை எல்லாம் நாம் தான் அடைக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திருநெல்வேலியில் 9ம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் மது அருந்துகிறார்கள். பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வேதனையான சம்பவம் பற்றி அப்பா ஸ்டாலின் கொஞ்சமும் கவலைப்படவில்லை.போதைப்பொருள் விற்பனை அதிகரித்தபோது உளவுத்துறை விழிப்போடு இருந்து தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்துக்கு ஏவல் செய்யும் துறையாக இருக்கிறது. உளவுத்துறை செயல் இழந்துவிட்டது.
போதை ஆசாமிகளை பிடிக்கச் செல்லும் காவலர்களை குற்றவாளிகள் தாக்குகின்றனர், காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. சில இடங்களில் கைதுசெய்ய முற்படும்போது கத்தியைக் காட்டி போலீஸை மிரட்டுகிறார்கள். மக்களைக் காக்கும் போலீஸுக்கும் பாதுகாப்பில்லை, மக்களுக்கும் பாதுகாப்பில்லை.
சென்னை மாநகரில் பட்டப்பகலில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார், இன்றுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. அதேபோல் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டார், அந்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
15 நாட்களுக்கு முன்பு நான்குநேரியில் போதை ஆசாமிகள் மக்களை வெட்டுகின்றனர், இருவர் படுகொலை. சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரம் நின்றவர்களை போதை ஆசாமிகள் வெட்டுகின்றனர். பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. கிருஷ்ணகிரியில் திமுகவைச் சேர்ந்தவர் 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தார். குமாரபாளையத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் மரணம் அடைந்தனர். அதற்கு ஆளும் கட்சியினர் உடந்தை, அதனால் சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக வழக்குப்போட்டது நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. விடியா திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு திமுக அரசு துணை நிற்பது நிரூபணமாகியிருக்கிறது.
