நாகப்பட்டினம் மாவட்டம், வடுவெசேரி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குத் தெருப் பகுதியில் திடீரென மூங்கில் காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால், தீ மளமளவென அருகில் இருந்த குடியிருப்புகளுக்குப் பரவியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ வீடுகளைச் சூழ்ந்ததால், கலைச்செல்வன், வெள்ளையன், இளமுருகு, தங்கராசு, கலியபெருமாள் மற்றும் பச்சையம்மாள் ஆகியோருக்குச் சொந்தமான 6 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இந்த விபத்தில், வீடுகளில் இருந்த நகை, பணம் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைமைகள் தீயில் கருகிச் சாம்பலாயின. அதிர்ஷ்டவசமாக, வீடுகளில் இருந்தவர்கள் தீயைக் கண்டவுடன் உடனடியாக வெளியேறிவிட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்ததும், கீழ்வேளூர் மற்றும் வேளாங்கண்ணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான தற்காலிகத் தங்குமிடம், உணவு மற்றும் உடை போன்ற அடிப்படை உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்தத் தீ விபத்துக்கான பின்னணி குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version