பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபடவுள்ளனர்.
61 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் பிரச்சனை இன்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தங்கச்சி மடத்தில் இன்று அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர். மாலை 3 மணியளவில் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ராஜமனோகரன் தலைமையில் மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததால், திட்டமிட்டபடி இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப் போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.