தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும்,ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு,சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும், நீர் வரத்து சீரான தகவல் வந்தவுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும் எனவும், வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.