சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை மூன்று வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதில் யுவராஜ் உள்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையைக் குறைத்து தீர்ப்பளித்தது.
இந்த கொலை வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். உயர் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக வாதங்களை முன் வைத்தார்.
சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம், இதுவரை வழங்கப்படவில்லை எனவும், கட்டணத்தை வழங்கக் கோரி அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, ப.பா.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் மோகனின் கோரிக்கை மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் கட்டணம் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, மூன்று வாரங்களில் அவருக்கான கட்டணத்தை வழங்க உத்தரவிட்டார். கட்டணம் வழங்கியது குறித்து ஜூன் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.