50 ஆயிரத்திற்கும் பொதுமக்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என புதிய விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தக் கூடிய பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. அதன் அடைப்படையில் தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், விசிக உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்துவது, தனியார் சொத்துகள் சேதமானல் இழப்பீடு வழங்குவது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்குவது உள்ளிட்டவைகளை அனுமதி கோரி மனு அளிக்கப்படும் போது இணைத்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
குறைந்த ஆபத்து உள்ள இடத்தில் 200 பேருக்கு ஒரு காவலர், மிதமான ஆபத்து உள்ள இடத்தில் 100 பேருக்கு ஒரு காவலர், அதிகமான ஆபத்து உள்ள இடத்தில் 50 பேருக்கு ஒரு காவலர் நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சேதங்கள் ஏற்பட்டால், அவற்றை ஈடு செய்யும் வகையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு 3 லட்ச ரூபாயும், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு 8 லட்சமும், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுக் கட்டணம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் போது 100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும், குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட வேண்டும். கூட்டம் நடத்தப்படுவதற்கு குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூட்டம் நடத்துபவர்கள் கழிவறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் தீயணைப்பு துறை சுகாதாரத்துறை விதியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த வேண்டுமெனில், உரை நிகழ்த்துமிடம், சிறப்பு விருந்தினர் வருகை தரும் நேரம், எதிர்பார்க்கப்படும் கூட்டம், ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும், அதோடு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு காவல் ஆய்வாளர் அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு எழுந்த புகார்கள், விதிமீறல்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியது உறுதி செய்யப்பட்டால், டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோ நடத்தும் போது சிறப்பு அழைப்பாளர்கள் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தூரத்தில் தடுப்பை அமைப்பாளர்களே ஏற்படுத்த வேண்டும் என்றும், வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதை தன்னார்வலர்களை கொண்டு தடுக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு 10 நாட்கள் முன்பாகவும், அங்கீகரிக்கப்படாத இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும் அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பரிந்துரைகள் பெறப்பட்ட நிலையில், வரும் 10ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகளை ஒருங்கிணைத்து முழுவடிவில் இறுதி அறிக்கை தயாரித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
