தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும்.
தமிழ்நாடு என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழி பாரம்பரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொண்ட நிலம். இத்தகைய மாநிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் அரசுத் துறைகளில் இந்தி பெயர்களை முன்னிறுத்துவது, மொழி ஆதிக்கத்தை திணிக்க முயலும் அரசியல் நோக்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மொழிகள், பண்பாடுகள் உள்ள சூழலில் ஒரு மொழியை மட்டும் மேலோங்கச் செய்யும் முயற்சி இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பலவகை மொழிகளை மதிக்க வேண்டிய ஒன்றிய அரசு, அதை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழின் மாண்பையும் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே இந்தி பெயரை உடனடியாக நீக்கி அதற்குப் பதிலாக தமிழில் பொருத்தமான பெயரை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
