குதிரை, கழுதை போன்ற விலங்கினங்களைத் தாக்கக்கூடிய, மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஆபத்தான “கிளாண்டர்ஸ்” (Glanders) பாக்டீரியா தொற்று சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குதிரை ஒன்று தற்போது உயிரிழந்துள்ளது.

அந்த குதிரையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் உடலில் பல இடங்களில் புண்கள், வீங்கிய கட்டிகள், கடுமையான சதை சுருக்கம் போன்ற அறிகுறிகளை கண்டறிந்தனர். இதையடுத்து கிளாண்டர்ஸ் நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசின் ICAR–National Research Centre on Equines ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த மாதிரிகள் வைத்து பல்வேறு கட்ட பரிசோதனைகளில் கிளாண்டர்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறையும் சுகாதாரத்துறையும் இணைந்து அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. உயிரிழந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்றும் அதற்கு அருகில் இருந்த அனைத்து குதிரைகளையும் உடனடியாகத் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த கால்நடை பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை!

கிளாண்டர்ஸ் என்பது பொதுவாகக் குதிரை, கழுதைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு ஆபத்தான ‘ஜூனோடிக்’ தொற்றாகும்.  பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் திரவங்கள்,  காயங்கள் மூலம் மனிதர்களுக்கு இது பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் குதிரை வளர்ப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரி நடத்தும் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளுக்குப் பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version