தொண்டர்களின் விருப்பத்திற்காக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இன்று இணைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின் விருப்பத்திற்காக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக கூறினார். 2016ல் விஜயகாந்த் விரும்பியது 10 ஆண்டுகள் கழித்து நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்டுகள், போட்டியிடும் தொகுதிகளை திமுக-தேமுதிகவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு முடிவு செய்யும் என்று கூறிய அவர், திமுகவுடன் திமுக முதல்முறையான கூட்டணி அமைத்துள்ளோம் இரண்டு கட்சியினரும் இந்த கூட்டணி சந்தோஷத்துடன் வரவேற்று இருக்கிறார்கள் அதனால் இந்த கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்றார்.
மேலும், அதிமுக கூட்டணிக்கு சென்றதாக என்ற ஒரு தகவல் வெளியாகிறது அப்படி இருக்கும்போது திமுக கூட்டணிக்கு வந்த காரணம் என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஊடகங்கள் தான் இந்த தவறான செய்திகளை பரப்பியிருந்தீர்கள் பலமுறை அதற்கு நான் விளக்கம் கொடுத்து விட்டேன். இந்த கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது உறுதி செய்யப்பட்டு விட்டது என்றார்.
