அரசியலில் திமுகவே தனக்கு முதல் எதிரி என்று விஜய் கூறிவரும் நிலையில், நான் யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை, அனைவரையும் நண்பர்களாக பார்க்கிறேன், மதிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி இன்னும் 2 நாட்களில் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய எதிரிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், சிரித்தப்படி, யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை, அனைவரையும் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் மதிக்கிறேன் என்றார்.
