தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 884 வழக்குகளில், 857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 ரூபாய் தீர்வுத் தொகை வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று (டிச. 13) தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், 3 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 516 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த லோக் அதாலத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 96 ஆயிரத்து 358 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத 7 ஆயிரத்து 526 வழக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 844 வழக்குகளில், 857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 ரூபாய் அளவுக்கு இழப்பீடுகள் வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில், 20 ஆயிரத்து 239 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 224 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 567 ரூபாய் தீர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
