மதுரையில் இன்று (டிச. 7) நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று (டிச. 7) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.795 கோடி மதிப்பில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.8,668 கோடி மதிப்பில் 96.55 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.27,463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று (டிச. 7) நடைபெறும் விழாவில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை முதலமைச்சர் வழங்க உள்ளார். ரூ.3,065 கோடி மதிப்பில் முடிவடைந்த பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.150.28 கோடி மதிப்பில் மதுரை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என பெயரிடப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
