நாம் தமிழர் கட்சியில் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், சில காலம் அரசியலில் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
அதிமுகவில் இணையும் காளியம்மாளுக்குக் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது அடுக்குமொழிப் பேச்சும், சாமானிய மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கும் அதிமுகவின் பிரச்சாரக் களத்திற்குப் பலம் சேர்க்கும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை அல்லது பூம்புகார் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒருவேளை தேர்தல் கூட்டணிச் சூழல் காரணமாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவருக்கு வாரியத் தலைவர் பதவி அல்லது மீனவர் நல வாரியத்தில் முக்கியப் பொறுப்பு வழங்க தலைமை உத்தரவாதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. தொடக்கத்தில் அவர் திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவைத் தேர்ந்தெடுத்துள்ளது தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
அதிமுகவில் இணைந்தது ஏன்?. அதிமுகவில் ஜனநாயக சூழல் இருப்பதாலும் எளிய குடும்பத்தின் பின்னணியை கொண்ட தமிழன் தலைமையை ஏற்கவேண்டும் என்ற அடிப்படையிலும் அதிமுகவில் இணைந்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சி பொறுப்பு வழங்குவது குறித்தும் தலைமை முடிவு செய்யும் என்று கூறிய அவர், அதிமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு அல்ல; தனது மக்களின் முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
