தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆகியோரைச் சுற்றி எழும் சர்ச்சைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கரூர் பிரசாரக் கூட்டத்தின் போது, தவெக தலைவர் விஜய் தனது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தியதாகவும், இது தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பிரசார மேடையை சினிமா படப்பிடிப்புத் தளமாகப் பயன்படுத்தியது மற்றும் அதில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்துப் பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டன. குறிப்பாக, அரசியல் கூட்டத்தை சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தவெக மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தச் சர்ச்சைகள் குறித்து தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா ஆர்.கே. நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மௌனம் கலைத்துப் பேசினார். “நாங்கள் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லவில்லை என்று உறுதியாகத் தெரிந்தவுடன், சில தரப்பினர் கொடூரமான மனநிலையுடன் இத்தகைய பொய்ப் பிரசாரங்களை உருவாக்கி வருகின்றனர்” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கரூரில் நடந்தது மக்கள் வெள்ளமே தவிர, அது சினிமா படப்பிடிப்பு அல்ல என்றும், தேவையில்லாமல் சிபிஐ பெயரை இழுத்து மக்களைக் குழப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், திட்டமிட்டே அவரது அரசியல் வளர்ச்சியைத் தடுக்க இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் தவெக தொண்டர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இடப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறிகளே இத்தகைய மோதல்களுக்கு அடிப்படை காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version