ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் இதமான வானிலை காரணமாக, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட இன்று (மே 24) மிக அதிகமாகக் காணப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை படகுகளில் சென்று கண்டு களித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்ய பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், கடற்கரையோரம் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் சிப்பி மற்றும் சங்கு மாலைகள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரைப் பகுதியில் விபத்துகளைத் தவிர்க்கவும், படகுத் துறையில் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். இதமான காற்று வீசியதால், தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version