இன்று அதிகாலை புனேயில் இருந்து, 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால், தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்துவிட்டு, அதன் பின்பு பத்திரமாக தரையிறங்கியது.

இது குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பரங்கிமலை, கிண்டி போலீசுக்கும் தகவல் தெரிவித்து விசாரணை.

சென்னை விமான நிலையத்தில், இரண்டு வாரங்களில் இது மூன்றாவது சம்பவம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புனேயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 178 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்க வந்து கொண்டு இருந்தது. விமானம் அதிகாலை 1.10 மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாகப் பறந்து கொண்டு இருந்தது.

அப்போது கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி பீய்த்து அடிக்கப்பட்டது. இதை அடுத்து நிலை குலைந்த விமானிகள், அடுத்த சில வினாடிகளில் தங்களை சுதாகரித்துக் கொண்டனர். உடனடியாக தாழ பறந்து கொண்டிருந்த விமானத்தை, மீண்டும் வானில் பறக்கச் செய்தனர்.

அதோடு விமானிகள் அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையம் மற்றும் விமான பாதுகாப்புத் துறையான பி சி ஏ எஸ் எனப்படும், பீரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அலுவலகம் ஆகியவற்றுக்கும் அவசரமாக, தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த லேசர் லைட் ஒளி அடுத்த சில வினாடிகளில் மறைந்து விட்டது. இதை அடுத்து, விமானி விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில், அதிகாலை 1.20 மணிக்கு தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறங்கிச் சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில், சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, பரங்கிமலை மற்றும் கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில் இதைப் போன்ற லேசர் லைட் ஒளி எங்கிருந்து அடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இதை போல் அடிக்கடி தரையிறங்கும் விமானங்கள் மீது நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் லேசர் லைட் ஒளிகளை பீய்ச்சி அடித்து, விமானங்கள் தரையிறங்குவதற்கு இடையூறுகளை சமூக விரோத கும்பல்கள் ஏற்படுத்திக் கொண்டு இருந்தனர். அதன் பின்பு விமான நிலைய அதிகாரிகளும் போலீசாரும் எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக, அதைப்போன்ற சம்பவங்கள் இல்லாமல் இருந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்கும் போது, இதைப்போல் லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இது மூன்றாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version